ஆர்யன் கான் தொடர்பாக நடிகர் ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி பேரம்..? சாட்சி அளித்த பேட்டியால் திடீர் திருப்பம்.!
போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கான் தொடர்பாக அவருடைய தந்தை நடிகர் ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆர்யன்கான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில், தனியார் புலனாய்வு ஆய்வாளர் கே.பி.கோசவியும் அவருஐய உதவியாளர் பிரபாகர் செயிலும் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரபாகர் செயில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பிரபாகர் செயில் கூறுகையில், “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 9-10 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். என்.சி.பி அதிகாரிகளும் மேலும் சிலரும் வழக்கு விஷயமாக ஆர்யன்கானின் தந்தை நடிகர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசினார்கள்” என்று பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்தப் பேட்டியால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரபாகர் செயிலின் பேட்டியை, என்.சி.பி. அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
“விசாரணை அமைப்பின் பெயரை கெடுக்கவே இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை” என்று என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.