ரூ. 1000 கோடியில் சினிமாவாகும் ‘மகாபாரதம்’...!!! - ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் தயாரிக்கிறார்!!
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள இந்திய தொழிலதிபர் ஒருவர் மகாபாரத காவியத்தை திரைப்படமாக எடுக்க ரூ. ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளார்.
இந்த மகாபாரதம் திரைப்படத்தை புகழ்பெற்ற விளம்பரப்பட இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்க உள்ளார். இரு பிரிவுகளாக தயாரிக்கப்பட உள்ள இந்த மகாபாரதம் திரைப்படம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, 2020ம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. 2-வது பகுதி அடுத்த 3 மாதங்களில் வெளியிடப்படும்.
இந்த படத்தை தயாரிக்க உள்ள கோடீஸ்வர தொழிலதிபர் பி.ஆர். ஆர்.பி.டி. பி.ஆர். ஷெட்டி கூறுகையில், “ இந்த மகாபாரதம் திரைப்படம் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் மொழிமாற்றம் செய்யப்படாமல், பெரும்பாலான இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படும்.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி மக்களை சென்றடையும் என நம்புகிறேன். 100 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.
தொழிலதிபர் ஷெட்டி இந்திய கலைகள், கலாச்சாரத்துக்கு பல ஆண்டுகளாகவே ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில், உள்நாட்டு நடிகர், நடிகைகள், கலைஞர்களோடு சர்வதேச புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர்.ஹாலிவுட்டில் பணியாற்றிவரும் மிகப் புகழ் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், ஆஸ்கார் விருந்து வென்றவர்கள் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
மாகாபாரதம் என்பது மிகப்பெரிய வரலாற்று காவியம். அதை திரைப்படத்தில், எம்.டி. வாசுதேவன் நாயரின் ரன்டமூலம் நாவலைத் தழுவாமல் எடுப்பது சாத்தியமில்லை. அந்த நாவல் பீமன், பாண்டவர்களை பற்றியதாகும்.
படத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், “ இந்த திட்டத்துக்காக கடந்த சில ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட பணிகள், கிராபிக்ஸ், அனிமேஷன் ஆகியவற்றுக்கு தயாராகி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.