ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி தவிர இரண்டு விமானிகள், 10 விமான ஊழியர்கள், 241 பயணிகள் உட்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்துள்ளார்.
மாணவர் விடுதிக்குள் நுழைந்த விமானம்
விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்லூரியின் மாணவர் விடுதி ஒன்றில் புகுந்ததால் அங்கும் பலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நபர் மட்டும் உயிர்பிழைப்பு
முன்னதாக விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என குஜராத் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவசர கால வெளியேறும் வழியாக 40 வயதான ரமேஷ் விஸ்வாஸ் குமார் என்ற இளைஞர் உயிர் தப்பி உள்ளார். விமானத்திலிருந்து குதித்ததால் அவரது மார்பு, கண், கால் உட்பட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ரத்தக் கறைகளுடன் நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டாடா குழுமம் இழப்பீடு அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் முழு மருத்துவச் செலவையும் டாடா குழுமமே ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
