"பத்மநாபசாமி கோவில் பாதாள அறையை திறக்க கூடாது" - அரச குடும்பம் கடும் எதிர்ப்பு!!
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திறக்கப்படாமல் இருக்கும் பி எனப்படும் பாதாள அறையை திறப்பதற்கு அரச குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்சசீதிமன்றம் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திறக்கப்பட்ட பாதாள அறைகளில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஓரேயொரு பாதாள அறை மட்டும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
அந்த அறையில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதை விட பலமடங்கு அதிக நகைகள் இருப்பதாகவும், அந்த அறையை திறந்தால், உலகம் அழிந்துவிடும் என்றும் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கில் உதவி செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி, மாய சக்தி இருக்கலாம் என்ற எண்ணத்தில், பி என்று குறிப்பிடப்படும் பாதாள அறை திறக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பு, அந்த அறை திறக்கப்பட்டிருப்பதாகவும், எனவே தற்போதும் அதை திறக்க வேண்டும் என்றும் கோபால் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் , கோயில் நிர்வாகத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், திறக்கப்படாமல் இருக்கும் 'பி' பாதாள அறையை திறக்கலாமா,வேண்டாமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயிலில் திறக்கப்படாமல் இருக்கும் பி எனப்படும் பாதாள அறையை திறப்பதற்கு அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அந்த அறை திறக்கப்பட்டால் கோவில் மற்றும் தெய்வத்தின் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.