பள்ளிக்கூடங்களில் வருகைப் பதிவின்போது ‘ஜெய்ஹிந்த்’ இனி கட்டாயம் அரசு அதிரடி உத்தரவு
பள்ளிக்கூடங்களில் வருகைப்பதிவின்போது மாணவ-மாணவிகள் இனி ‘ஜெய் ஹிந்த்’ என பதில் அளிப்பது கட்டாயம் என, மத்திய பிரதேச பா.ஜனதா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமலுக்கு வந்தது
அந்த மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் விஜய்ஷா, போபாலில் நடைபெற்ற தேசிய மாணவர் படை தொடர்புடைய விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இது குறித்து அவர் கூறியதாவது-
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை பதிவிற்கு பதிலளிக்கும் போது ஜெய்ஹிந்த் என்று கூறியே பதிலளிக்க வேண்டும். இது ம.பி.,யில் உள்ள 1.22 லட்சம் அரசு பள்ளிகளிலும் நவம்பர் 27 (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது.
தனியார் பள்ளிகளும்
தனியார் பள்ளிகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளி தேசிய மாணவர் படையிலும் விமானப்பிரிவு மற்றும் கடற்படை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்டாயம்
அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 1 முதல் ஜெய்ஹிந்த் கட்டாயமாக்கப்பட உள்ளதாக செப்டம்பர் மாதம் விஜய் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் தினமும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும், தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும் ஆளும் பா.ஜ., அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ள நிலையில், இனி பள்ளிகளில் 'எஸ் சார் (உள்ளேன் ஐயா), எஸ் மேடம்' ‘பிரசன்ட் சார்’ என வருகை பதிவிற்கு பதிலளிப்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என கூறும் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.