"இனி ஏடிஎம்களில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்" - கட்டுப்பாட்டை நீக்கியது ரிசர்வ் வங்கி
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இரவு முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் களில் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி விதித்த அனைத்து கட்டுப்பாடுகளும் இன்றுடன் நீக்கப்பட்டுள்ளன.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகள் மூலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி வரை திரும்பப் பெறப்பட்டன.
அதே நேரத்தில் பண தட்டுப்பாட்டை குறைப்பதற்காக, வங்கிகள் மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.
இதனால் பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையத் தொடங்கியதையடுத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 24,000 ரூபாயில் இருந்தது லிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மேலும் மார்ச் 13 ம் தேதியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
அதன்படி இன்று முதல் வங்கி மற்றும் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. கடந்த 4 மாதங்களாக பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.