ஜூலை 24-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்.. எந்தெந்த மாநிலங்களில்? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..
10 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோவா, குஜராத், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவா, குஜராத், ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 13-ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனுவை திரும்ப பெற ஜூலை 17-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகாலம் நிறைவடைய உள்ள எம்.பிக்களில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், டெர்ரிக் ஓ பிரையன் ஆகியோர் அடங்குவர். குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி ஜெய்சங்கர், தினேஷ் சந்திரா, ஜெமல்பாய், அனாவாடியா, லோகந்த்வாலா ஜுகல்சிங் மாதுர்ஜி ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ம் தேதி நிறைவடைகிறது.
கோவா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வினய் டி டெண்டுல்கரின் பதவிக்காலம் ஜூலை 28-ம் தேதி முடிவடைய உள்ளது. அதே போல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டெர்ரிக் ஓ பிரையன், டோலா சென், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ரே ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ம் தேதி முடிவடைய உள்ளது. அதே போல் காங்கிரஸ் எம்.பி, பிரதீப் பட்டாச்சார்யாவின் பதவிக்காலமும் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, லூயின்சின்கோ ஜோகிம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்திற்கும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில், 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ராஜஸ்தானில் 3 இடங்களை தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
15 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்.. PoK-ல் 2 நாட்களில் நடந்த தரமான சம்பவம்..