“பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்” - இத்தாலி புறப்பட்டார் ராகுல்!!
இத்தாலியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக டுவிட்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாண்ட்சோர் மாவட்டதில் கடந்த வாரம் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது, அதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கடந்த சில நாட்களுக்கு முன் மான்ட்சோர் புறப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் விவசாயிகளுக்கு மோடி அரசு போனஸ் ஏதும் கொடுக்காமல் புல்லட்களைத்தான் பரிசாக அளிக்கிறது என்று பிரதமர் மோடியை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இத்தாலியில் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக ராகுல்காந்தி நேற்று புறப்பட்டார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது- இத்தாலியில் இருக்கும் எனது பாட்டி, அவர்களின் குடும்பத்தைச் சந்திக்க சில நாட்கள் அங்கு செல்கிறேன். அங்கு தங்கி சில நாட்கள் அவர்களுடன் என் நேரத்தை செலவு செய்யப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.