Punjab Election Results 2022 : பஞ்சாப் இனி ஆம் ஆத்மி ‘கோட்டை..’ காங்கிரஸ் பரிதாபம்.. இதுதான் காரணம் !!
Punjab Election Results 2022 : உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து இருந்ததை காண முடிந்தது.
ஆனால் பா.ஜ.க.வை விட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் செல்வாக்குதான் அதிகம் உள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்துவின் வருகையால் பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனால் பஞ்சாபில் பா.ஜ.க.வின் முயற்சிகள் எடுபடாமல் போனது. பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு என்ற கோஷத்தை பஞ்சாபில் முன்வைத்தனர். அதுவும் எடுபடவில்லை.
அதே போன்றுதான் காங்கிரஸ் கட்சி தலித் இனத்தவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி உள்ள போதிலும் மக்களை கவர இயலவில்லை. இவர்களுக்கு இடையே விளக்குமாறுடன் வந்த ஆம் ஆத்மி கட்சி மாதந்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை தருவதாக அறிவித்துள்ளது. இது பஞ்சாப் பெண்களை ஆம் ஆத்மி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் பஞ்சாபில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதை ஓட்டுப்பதிவு முடிந்தவுடனேயே பா.ஜ.க. வினர் சொல்லிவிட்டனர்.
ஆகையால் பஞ்சாபை கைப்பற்ற கெஜ்ரிவாலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் உறுதிபடுத்தி உள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் 6 கருத்து கணிப்புகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காங்கிரசின் வீழ்ச்சி ஆம் ஆத்மிக்கு லாபமாக மாறி உள்ளது. அகாலிதளம் கூட்டணி, பா.ஜனதா கூட்டணிகளாலும் ஆம் ஆத்மி ஆதிக்கத்தை பஞ்சாப்பில் தடுத்து நிறுத்த இயலவில்லை என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகள் சொல்கின்றன.
பகவந்த் மானை ஆம் ஆத்மி முன்னிறுத்தும்போது, தற்போதைய சரண்ஜித் சன்னியை முதல் மந்திரி வேட்பாளராக கொண்டு காங்கிரஸ் தேர்தலுக்குச் சென்றது. பாஜக நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(அகாலிதளம்)யுடன் பிரிந்து, பிஎல்சி மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணியில் போட்டியிட்டது. எஸ்ஏடி(அகாலிதளம்) பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்தது.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 85 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 10 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
84 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்களை நிஜமாக்கும் வகையில் ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், துரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து அவரது வீட்டின் அருகே ஆம்ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.