புனேயில் பயங்கர விபத்து ! கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி !!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து அருகே உள்ள குடிசைகள் மீது விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதம் பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை தீவிரமடைந்தது. மும்பையில் நகரம் முழுவதும் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது.
தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. புனே நகரில் கனமழை கொட்டியது. இதனால், மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றன.
இதற்கிடையே, புனே அருகே உள்ள கொந்த்வா என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடத்தின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் சிக்கி பலியாகினர்.
அருகில் இருந்த குடிசைகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சில கார்கள் சிக்கியுள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.