Puducherry - Banned for banner
தமிழகத்தில் பேனர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது போலவே புதுச்சேரி அரசும் பேனருக்கு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அரசியல், சினிமா, திருவிழா என எந்த நிகழ்வாக இருந்தாலும் பிரம்மாண்டமாக பேனர்கள் வைப்பது புதிய கலாச்சாரமாக மாறி வந்தது. எங்கு பார்த்தாலும், பேனர்கள்... குடியிருப்பு பகுதிகள், சாலைகள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், பேனர் கலாசாரத்துக்கு செக் வைக்கும் விதமாக, கடந்த 24 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
சென்னையைச் சேர்ந்த திரிலோக்ஷனா குமாரி என்பவர், பேனர்களால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கட் அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில், வழக்கு தொடுத்தது. உயிரோடு இருப்பவர்களின் பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
தமிழகத்தில் ஃப்ளெக்ஸ் பேனருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும், பேனர் வைக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து, புதுச்சேரியிலும் பேனர் வைக்க அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை உயிரோடு இருப்பவர்களின் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுவைச்சேரியிலும் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.
இந்த தடை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அரசின் தடையை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். பொதுமக்கள், அரசியல் கட்சியினர், ரசிகர் மன்றங்களைச் சார்ந்தோர்கள் இதற்கு ஒத்துழைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள், 2 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அப்போது கேட்டுக் கொண்டார்.
