protest against tarun vijay in puducherry

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழத்திற்கு வந்த மத்திய அமைச்சர் தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர்களுக்காகவும்,தமிழ் மொழிக்காவும் டெல்லியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் தருண் விஜய். திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்டில் நிறுவப்பட்டதன் முழு பெருமையையும் இவரையே சேரும்.

தமிழக மக்களுக்கு பிடித்த ஒரே பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் தான் என்ற அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் இவருக்கு மவுசு அதிக அளவில் இருந்தது. 

இதுவரை தான் சேர்த்து வைத்த நற்பெயரை தென்னிந்தியர்கள் கருப்பர்கள் என்ற ஒற்றை வார்த்தை மூலம் அண்மையில் தருண் விஜய் கெடுத்துக் கொண்டார்.

அப்போதே தருண் விஜய்க்கு எதிராக பல்வேறு தமிழ் அமைப்புகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தன. இந்தச்சூழலில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

விழாவின் தொடக்கம் வரை அமைதி காத்த மாணவர்கள், தருண் விஜய் மைக் பிடித்ததும், எதிர்ப்பு தெரிவித்து திடீரென முழக்கமிடத் தொடங்கினர். பதற்றம் அடைந்த காவலர்கள் மாணவர்களை அமைதி காக்கும்படி அறிவுறுத்தினர். "தருண் விஜயே வெளியேறு".. "தருண்விஜயே வெளியேறு".. என்று அரங்கமே அதிரும் வகையில் மாணவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். 

இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மாணவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு பாடுபட்ட தருண்விஜய் அவர் எழுதிய இக்குறளை படித்திருக்க மாட்டார் போல

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு"