இதில் கூடவா இந்தியா முதலிடம் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை...!
பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல தானே துடைப்பத்தை கையில் எடுத்து தரையை கூட்டி விளம்பரம் செய்தார்.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரங்கலை தொலைக்காட்சியிலும் சினிமா திரையரங்கிலும் ஒளிபரப்பி விழிப்படைய செய்து வருகிறது மத்திய அரசு.
இந்நிலையில், வாட்டர்எய்டு என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை எனவும் அவர்கள் சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் கழிவறைக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அவர்களை ஒரு வரிசையில் நிறுத்தினால் பூமியை நான்கு முறை கயிறால் சுற்றும் அளவிற்கு இந்த எண்ணிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியா முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும் இடம் பிடித்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
கழிவறை இல்லாததால் ஆரோக்கிய குறைவு, குறைந்த கல்வியறிவு, சந்தர்ப்பங்களை இழத்தல், கழிவறையின்றி பொது இடத்திற்கு செல்லும்பொழுது தாக்கப்படும் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.