Pongal festival : கலாச்சாரத்தின் அடையாளம் ‘பொங்கல்’... தமிழில் ட்வீட் செய்த.. பிரதமர் மோடி !!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழில் வாழ்த்து கூறியுள்ளார் பிரதமர் மோடி.
எல்லாத்தொழிலுக்கும் மேலான தொழில் வேளாண்மைத்தொழில். இந்த தொழிலை செய்யும் விவசாயி தன் உழைப்பின் மூலம், தான் சிந்தும் வியர்வை மூலம், சேற்றில் கால் பதிப்பதன் மூலம் உலகுக்கே உணவளிக்கிறான். அவனுக்கு துணையாக நிற்பது சூரியனும், கால்நடைகளும் என்றால் மிகையாகாது.உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். பொங்கல் பண்டிகையின் மற்றொரு சிறப்பு தித்திக்கும் கரும்பு. சர்க்கரை பொங்கல் இனிப்பு, கரும்பு இனிப்பு என்று அந்த ஆண்டு முழுவதும் இனிப்பாகவே கழியும் என்பதை கட்டியம் கூறும் நாள்தான் பொங்கல். இதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது . சிறப்பு வாய்ந்த நாளில் அனைவரும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிராத்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.