பிரியாவிடை கொடுக்கும் பிரணாப்... நாள்தோறும் களைகட்டும் ஜனாதிபதி மாளிகை!
இன்னும் 2 வாரங்களில் ஜனாதிபதி பதவி முடியப்போகும் நிலையில், பிரணாப் முகர்ஜி, ஒவ்வொரு நாளும் பலதரப்பட்டோருக்கு விருந்துகள் அளித்து பிரியாவிடை அளித்து வருகிறார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியோடு முடிகிறது. புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்தவதற்கான தேர்தல் பணிகள் தொடங்கி, தேர்தலும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், பிரணாப்முகர்ஜி, தன்னுடன் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரிவினருக்கு விருந்துகள் அளித்து தனது பிரியாவிடையை செலுத்தி வருகிறார்.
கடந்த 3-ந்தேதி முதன்முதலாக பத்திரிகையாளர்களை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்த பிரணாப், அவர்களுக்கு சிறப்பான விருந்து அளித்து பிரியாவிடையை தெரிவித்தார். அதன்பின் 7-ந்தேதி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் அனைவருக்கும் விருந்துகள் அளித்தார்.
இந்நிலையில், வரும் 12-ந்தேதி 35 மாநிலங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு விருந்துகள் அளிக்க பிரணாப் முடிவு செய்துள்ளார். மேலும், 18-ந்தேதி ஜனாதிபதிமாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், “ ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நேரக்குறைவு கருதி, நாள்தோறும் விருந்துகளை பிரணாப் முகர்ஜி நடத்தி வருகிறார். அடுத்த ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்தபின், மத்திய அமைச்சர்களுக்கு விருந்து வைக்க பிரணாப் திட்டமிட்டுள்ளார். வரும் 22 அல்லது 23 ந்தேதி அமைச்சர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் விருந்து அளிக்கப்படலாம். வரும் 13-ந்தேதி பாதுகாப்பு படையின் தளபதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.