காமராஜரின் கருத்துப்படி பிரதமராவதற்கு நான் சரியான நபர் இல்லை..! பிரணாப் முகர்ஜி ஓபன் டாக்..!
டெல்லியில் நடைபெற்ற பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான ”தி கொலீஷன் இயர்ஸ்: 1996-2012” என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
அதில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராகப் பதவி வகிக்க என்னைவிட பிரணாப் முகர்ஜிக்கே தகுதி அதிகம் இருந்தது என்று பேசியிருந்தார்.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது சோனியா காந்தி பிரதமராக முடியாத சூழல் உருவானது. அப்போது, பலமுறை மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கே பிரதமர் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்மோகன் சிங்கை சோனியா காந்தி பிரதமராக்கினார். அதை நினைவுகூர்ந்து தன்னைவிட பிரதமர் பதவிக்கு பிரணாப் முகர்ஜிதான் தகுதி வாய்ந்தவர் என கூறினார்.
ஆனால், அந்த நேரத்தில் பிரதமராக வேண்டும் என தான் விரும்பவில்லை எனவும் பிரதமராவதற்கு தனக்கு முழு தகுதி இல்லை என தான் நினைத்ததாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய பிரணாப், பிரதமர் பதவி எனக்கு வேண்டாம் என்று நான் நினைத்தேன். மாநிலங்களவை உறுப்பினராகவே நான் அதிகமான முறை இருந்துள்ளேன். முதன்முறையாக 2004-ல் தான் மக்களவை உறுப்பினராக தேர்வானேன். மாநிலங்களவை உறுப்பினராகவே அதிக காலம் பதவி வகித்தது மற்றும் இந்தி சரியாகத் தெரியாதது போன்ற காரணங்களால் நான் பிரதமர் பதவிக்குச் சரியான நபர் இல்லை என்று தோன்றியது. பிரதமராக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்ததில்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
இந்தி தெரியாததால் பிரதமர் பதவிக்கு சரியான நபர் நான் இல்லை என்ற கருத்தை, காமராஜரின் வாக்கியத்தை சுட்டிக்காட்டி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
காமராஜருக்கு பிரதமராக வாய்ப்பு கிடைத்தபோது, இந்தி தெரியாததை காரணமாகக் காட்டி பிரதமர் பதவியை ஏற்க காமராஜர் மறுத்தார். இந்தி தெரியாத தான், பிரதமர் பதவிக்கு சரியான நபர் இல்லை என தெரிவித்து பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்தி தெரியாததால் பிரதமராக, தான் சரியான நபர் இல்லை என காமராஜரே தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இந்தி சரியாக தெரியாத நானும் பிரதமர் பதவிக்கு சரியாக நபர் இல்லை என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.