டெல்லி கலவரம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டெல்லிவாசிகளுக்கு போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இது போன்ற வதந்திகளை பரப்பிய சிலரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான 4 நாட்களும் வடகிழக்கு டெல்லி போர்களமாக காட்சி அளித்தது. குடியுரிமை திருத்த சட்ட எதிர்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்ததே இதற்கு காரணம். டெல்லி போலீசாரின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தீவிர பாதுகாப்பு பணிகளால் தற்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் டெல்லியின் சில பகுதிகளில் புதிதாக வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் நேற்று மாலைநேரத்தில் பயம் கலந்த சூழல் நிலவியது. மேலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக திலக் நகர் மற்றும் சுராஜ்மால், பதார்புர், துக்ஹ்லாபாத், உத்தம் நகர் மேற்கு, நவாதா ஆகிய ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியே செல்லும் கதவுகளை டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூடியது. இருப்பினும் சிறிது நேரத்துக்கு பின் ரயில் நிலையங்களின் கதவுகள் திறக்கப்பட்டன.

வதந்தி தொடர்பாக டெல்லி போலீசார் டிவிட்டரில், தென்கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் பதற்றமான நிலைமை நிலவுவதாக சமூக ஊடகங்களில் சில ஆதாரமற்ற அறிக்கைகள் பரப்பப்படுகின்றன. அவை அனைத்தும் வதந்தி என்பதை வலியுறுத்துகிறோம். இது போன்ற வதந்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம். வதந்திகளை பரப்பு கணக்குகளை டெல்லி போலீஸ் தீவிரமாக கண்காணித்து வருகிறது மற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது என பதிவு செய்துள்ளது.