கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..! பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தியுள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் நிதியுதவி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், பெற்றோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதி மூலம் நிதியுதவி செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என்ற பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.