விவாஹ் பஞ்சமியை முன்னிட்டு, பிரதமர் மோடி அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவர், கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், கோயில் சிகரத்தில் பிரமாண்ட காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

ராமர் மற்றும் சீதா தேவியின் திருமணத்தை நினைவுகூரும் விவாஹ் பஞ்சமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்குச் செல்ல உள்ளார். அப்போது, கோயிலில் காவிக் கொடியையும் ஏற்றி வைக்க இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும், 17-ஆம் நூற்றாண்டில் அயோத்தியில் 48 மணி நேரம் தியானம் செய்த ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் ஜியின் தியாக நாளாகவும் இந்த நாள் இருப்பதால், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பயணத் திட்டம்

பிரதமர் மோடி காலை 10 மணியளவில் சப்தமந்திர் ஆலயங்களுக்குப் செல்கிறார். இதனைத் தொடர்ந்து, அவர் ஷேஷாவதார் ஆலயம் மற்றும் மாதா அன்னபூர்ணா ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்கிறார்.

அதன் பிறகு, ராம் லல்லா கர்ப்பக்கிரகம் மற்றும் ராம் தர்பார் கர்ப்பக்கிரகத்தில் பிரதமர் மோடி தரிசனம் மற்றும் பூஜைகள் செய்கிறார்.

பிரமாண்ட காவிக் கொடியேற்றும் நிகழ்வு

பிற்பகல் 12 மணியளவில், பிரதமர் மோடி ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் சிகரத்தின் உச்சியில் 10 அடிக்கு 20 அடி அளவுள்ள பிரமாண்டமான காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

இந்தக் கொடியேற்ற நிகழ்வு, கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தைக் குறிக்கிறது.

இந்தக் கொடியில், பகவான் ஸ்ரீ ராமரின் வீரம் மற்றும் ஒளியைக் குறிக்கும் சூரியன் சின்னம், புனிதமான கோவிதார மரம், மற்றும் 'ஓம்' சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கலாச்சார முக்கியத்துவம்

கோயிலின் சிகரம் பாரம்பரிய வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோயிலைச் சுற்றியுள்ள 800 மீட்டர் சுற்றுச் சுவரான 'பர்கோட்டா'வில் தென்னிந்தியக் கட்டடக்கலை கூறுகள் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவின் பல்வேறு கோயில் மரபுகளின் கலவையாக விளங்குகிறது.

கோயில் சுவர்களில் வால்மீகி இராமாயணத்தில் இருந்து 87 காட்சிகள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. சுவர்கள் முழுவதும் இந்திய கலாச்சாரத்தைக் குறிக்கும் 79 வெண்கலச் சிற்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கோடியேற்றத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி அங்கு கூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர், இராமராஜ்யத்தின் இலட்சியங்கள், தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவின் வளமான பாரம்பரியம் ஆகியவற்றை வலியுறுத்திக் பேசுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.