Parliment session wil commence on July 12...

ஜுலை 12 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்… விஸ்வரூபம் எடுக்குமா மாட்டிறைச்சி விவகாரம்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டம் ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் வரும் 20–ந் தேதிக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் தேதி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத் தொடரில் மாட்டிறைச்சி விவகாரம், நீட் தேர்வு, பிளாஸ்டிக் அரிசி, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற முக்கிய பிரச்சைனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அங்கு அரசியல் கட்சி தலைவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததற்கும் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.