Parliamentary Panel Calls Sanjay Leela Bhansali Prasoon Joshi Over Padmavati Row
பத்மாவதி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, மத்திய தனிக்கை குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி, படம் குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பி உள்ளது.
சர்ச்சை
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிஇயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பத்மாவதி குறித்த வரலாற்று தகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டிசம்பர் 1–ந் தேதி படம் திரைக்கு வருவது தள்ளிவைக்கப்பட்டது.
சம்மன்
இந்த திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதையடுத்து, பத்மாவதி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, மத்திய தணிக்கை குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோர் நேரில் ஆஜராகி திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூற 30 பேர் கொண்ட நாடாளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப குழு சம்மன் அனுப்பிஉள்ளது.
இந்த நாடாளுமன்ற தகவல்தொழில் நுட்ப குழுமுன் படத்தின் இயக்குநரும், தணிக்கை துறை தலைவரும் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்கள்.
விளக்கம்
இது குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பத்மாவதி திரைப்படம் குறித்து கருத்துக்களைக் கூற படத்தின் இயக்குநர், தணிக்கை துறை தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பரேஷ் ராவல், பெனிபிரசாத் வர்மா, ஹேமா மாலினி, சச்சின் டெண்டுல்கர், ஹரிந்தர் சிங் கல்சா, ராஜ்பப்பர் உள்ளிட்டோர் உள்ளனர்.
