பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு: மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!
சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்

அரசு பணியில் உள்ள தாய்மார்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளை பேணி காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அதிகரித்து வழங்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்களும் பேறுகால விடுப்பை வழங்கி வருகின்றன.
மகப்பேறு நன்மை சட்டம் 1961இன் கீழ் பணிபுரியும் பெண்ணுக்கு ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. தமிழகத்தை பொறுத்தவரை மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டு அமலில் உள்ளது.
இந்த நிலையில், சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல், குழந்தைகளை பெற்ற ஆண்களுக்கு ஒரு மாதகாலம் விடுப்பு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விரைவில் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண் அரசு ஊழியர்களுக்கு இந்த பலனை வழங்கும் வகையில் சேவை விதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளையும், குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞானவாபி மசூதி வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை!
தொடர்ந்து பேசிய அவர், “சிக்கிம் மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து, மாநில நிர்வாகத்தின் முதுகெலும்பாக உள்ளனர். சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு செயல்முறையை சீரமைத்ததில் கவனம் செலுத்தப்பட்டதன் மூலம், பதவி உயர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” என்றார்.
முன்னதாக, சிக்கிமில் உள்ள பழங்குடி சமூகங்களின் மக்கள்தொகையை உயர்த்துவதற்காக, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது.
அதேபோல், மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ள ஊழியர்களுக்கு கூடுதலாக இன்னொரு ஊதிய உயர்வு வழங்கப்படும் என பணியாளர் துறை செயலாளர் ரின்சிங் செவாங் பூட்டியா தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும், 2023 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தையை பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நாட்டிலேயே குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமான்க சிக்கிம் மாநிலம் உள்ளது. அம்மாநில மக்கள் தொகை 6.32 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.