ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ்; விடாது துரத்தும் வருமான வரித்துறை
ரூபாய் நோட்டு தடைக்கு பின் ரூ. 25 லட்சத்துக்கு அதிகமாக வங்கியில் டெபாசிட் செய்த 1.16 லட்சம் தனிநபர்கள், நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் வருமானவரி ரிட்டன்களை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது-
ரூபாய் நோட்டு தடைக்கு பின் ஒட்டுமொத்தமாக 18 லட்சம் பேர் செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ரூ.25 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தனர்.
இந்த 18 லட்சம் பேரில் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யாத தனிமனிதர்கள், நிறுவனங்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளோம். ரூ.10 முதல் 25 லட்சம் வரை டெபாசிட் செய்தவர்கள், ரூ. 25 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் 25 லட்சத்துக்கும் அதிகமாக வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை ரூபாய் நோட்டுகாலத்தில் டெபாசிட் செய்துள்ளனர்.இவர்கள் அனைவரும் இன்னும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை.
2 லட்சத்து 40 ஆயிரம் பேர் ரூ.10 முதல் ரூ.25 லட்சம் வரை டெபாசிட் செய்துள்லனர். இவர்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு அடுத்த கட்டமாக வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்படும். வருமான வரிச் சட்டம் 142(1) பிரிவின்படி இந்த நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தை மீறியதாக கடந்த நிதியாண்டில் 288 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது, இந்த ஆண்டு இது இருமடங்காகி, 609 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 652 பேருக்கு எதிராக வருமான வரிச் சட்டம் தொடர்பாக புகார் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1,046 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு 13 நபர்களாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 43 ஆக உயர்ந்துள்ளது. இந்த 43 பேருக்கும் தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரங்கள் மட்டும் நீதிமன்றம் இன்னும் அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.