“ரொக்கமில்லா பரிவர்த்தனை இதுதானா...!!” பணம் இல்லாமல் மூடிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள்
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இதைதொடர்ந்து, ஒரு மாதம் ஆனபிறகும், நாட்டில் 82 சதவீத ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருந்து அள்ளல்படும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய ரூ.2000 நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆனால், வங்கிகளில் செலுத்தப்படும் அளவுக்கு மாற்றாக புதிய ரூ.500, அதற்கும் குறைவான நோட்டுகளை போதிய அளவில் இருப்பு வைக்கவோ, புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கவோ எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை.
உயர் மதிப்புடைய ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டது. வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தை எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களது அன்றாட பணிகளை விட்டு,விட்டு வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருப்பதும் ஒரு வேலை என்ற நிலை உருவாகிவிட்டது.
கருப்புப் பணம் ஒழிப்பு நோக்கத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும், உண்மையிலேயே கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் இடைத்தரகர்கள் மூலம் சுமார் 25 சதவீத கமிஷன் அடிப்படையில் தங்களது பணத்தை மாற்றிவிட்டனர்.
இதற்கு உதாரணமாக பல இடங்களில் நடைபெறும் வாகன சோதனை, வருமான வரித்துறையினரின் சோதனையில், லட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் புதிய ரூ. 2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதா செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
மத்திய அரசின் நடவடிக்கையால், நடுத்தர மற்றும் ஏழை மக்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதம் முடிவடைந்த நிலையிலும் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவநிலை தொடர்கிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல அவசிய தேவைகளுக்கு வங்கிகளின் முன் மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
முதியவர்கள், கிராமப் பெண்கள் பலரிடம் ஏடிஎம் கார்டு கிடையாது. ஆனால் அரசு தரப்பில் கார்டுகள் மூலம் பொருள்களை வாங்குங்கள் என கூறுகின்றனர். வங்கிகளில் புதிய ஏடிஎம் கார்டுகள் கேட்டு விண்ணப்பிக்க சென்றால், வேலைப் பளுவில் எரிந்து விழுகின்றனர். மேலும், ஒருமாதம் கழித்து வரும்படி விரட்டியடிக்கின்றனர். நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு, தற்போது, அதை திரும்பப் பெற கண்டவர்களிடம் பேச்சுவாங்கும் நிலை உள்ளது' என வேதனை தெரிவித்தனர்.