"குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு வாழ்நாள் தடையில்லை" - தேர்தல் ஆணையம் திடீர் பல்டி!!!
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள் தீவிரமான குற்றவழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர் தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது என்றும். தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதே போன்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஜெ.எம்.லிங்டோ, மக்கள் நல அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆகியோர் சார்பிலும் இதேபோன்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கில் தீவிரமான குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்ததது.
ஆனால் இந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றபோது, குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் திடீர் பல்டி அடித்துள்ளது.
இந்த வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இதுபோன்ற விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் வசம் தான் உள்ளது என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.