குடும்பக் கட்டுபாடு செய்து கொண்டால் ஸ்மார்ட்போன்...!!! - மக்களை ஈர்க்க புதிய திட்டம்...
குடும்பக்கட்டுபாடு செய்பவர்களை கவர்வதற்காக ரொகப்பணம், பட்டுசேலை, 4ஜி ஸ்மார்ட்போன் என இலவசங்களை அளிக்கும் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி 2-வது ஆண்டை வெற்றிகரமாக அடியெடுத்துவைத்துள்ள ராஜஸ்தான் அரசு, இந்த ஆண்டும் குடும்ப கட்டுப்பாட்டு இலக்கை அடைய, இலவசங்களை அள்ளி இறைக்கிறது.
முதன்முதலாக ஜலாவார் மாவட்டத்தில் இந்த திட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. முதல்வர் வசுதந்தரா ராஜேயின் சொந்தமாவட்டமான இதில் கடந்த 2015-16ம் ஆண்டு 8 ஆயிரத்து 410 பேருக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 99.25சதவீதத்தை அடைந்து வெற்றிகண்டது. கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 703 பேருக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த ஆண்டு கூடுதலாக பெண்களுக்கும், ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக இலசமாக 4ஜி ஸ்மார்ட்போன், பட்டுச்சேலைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
இது குறித்து ஜலாவார் மாவட்டத்தின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் சாஜித் கான் கூறுகையில், “ கடந்த 2016-17ம் ஆண்டில் பெண்கள் 8,525 பேருக்கும், ஆண்களில் 270 பேருக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்தோம்.
தொடர்ந்து 2 ஆண்டுகள் முதலிடத்தை பிடித்துள்ளதையடுத்து, இந்தஆண்டும் முதலிடத்தை தக்கவைக்க பல பரிசுத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம்.
மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குடும்பக்கட்டுப்பாடு முகாம் நடத்த கலெக்டரும் உத்தரவிட்டுள்ளார். முகாம் நடத்தியபின், அதில் பதிவு செய்தவர்களின் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் கலெக்டருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருந்தால், அந்த பெற்றோர்களை அணுகி குடும்பக்கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்குகிறோம்.
இதனை ஊக்கப்படுத்த ஆண்களுக்கு 4ஜி ஸ்மார்ட்போன்கள், பெண்களுக்கு பட்டுச்சேலை, ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்குகிறோம். இதுவரை 200 ஆண்களுக்கு 4ஜி ஸ்மார்ட்போன், 250 பெண்களுக்கு பட்டுச்ேசவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுப்பொருட்களை தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது.
இதற்காக ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் செலவிடுகிறது. மேலும், குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளும்ஆண்களுக்கு ஸ்மார்ட்போன் தவிர்த்து, ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமும், மாநில அரசு சார்பில் ரூ.1400 பணமும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.