பணத்தில் குளித்த வங்கி அதிகாரி….ரகசிய குளியலறையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்….
பணத்தில் குளித்த வங்கி அதிகாரி….ரகசிய குளியலறையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்….
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஆனால் சிலர் சட்ட விரோதமாக தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை ஏழைகள் பெயரில் டெபாசிட் செய்தும், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியும் வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் கருப்புப் பணம் பதுக்கலை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். குளியலறைக்குள் உள்ள ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள், ரூ.90 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 32 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஹவாலா ஆபரேட்டர் என சந்தேகிக்கப்படும் கே.வி.வீரேந்திரா என்பவரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது. இதுதவிர வங்கிகளைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த ஹவாலா பரிமாற்றத்தில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் வீரேந்திராவிடம் தீவிர விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் என்பவரை இன்று பிற்பகல் பெங்களூரில் கைது செய்துள்ளனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.