2 ரன்னில் ஆல் அவுட்... ஒரே பந்தில் இலக்கை எட்டி வெற்றி... அட கிரிக்கெட்டில் என்னவெல்லாம் சுவாரஸ்யம்..!?
இப்படியும் சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கிறது. அதுதான் கிரிக்கெட்! கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த நேரம் எப்படி திசை திரும்பும், எப்படி ஆகும் என்றெல்லாம் தெரியாமல், சாதனைகள் மட்டும் கூடிக் கொண்டே போகும். அப்படி ஒரு திகில் சாதனை நிகழ்ந்திருக்கிறது. அதுவும் நம் நாட்டில்!
2 ரன்களில் ஆல் அவுட் ஆன நாகலாந்து மகளிர் அணி நிர்ணயித்த இலக்கை ஒரே பந்தில் எட்டியது எதிரணியான கேரளம். நாகலாந்து - கேரள அணிகளுக்கு இடையேயான பிசிசிஐ சார்பில் நடைபெற்ற மகளிர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டி வித்தியாசமான முறையில் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நாகலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கணை மேனகா முதலில் ஒரு ரன் எடுத்தார், பிறகு ஒரு வைட் வீசப்பட்டது.
இதை அடுத்து நாகலாந்து அணியின் ஸ்கோர் 2 ஆக இருந்தது அப்போது மேனகா ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் ஆட வந்த நாகலாந்து வீராங்கணைகள் ஒன்பது பேரும், ஒரு ரன் கூட எடுக்கமுடியாமல் அத்தனை பேரும் டக் அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினர்.
இப்படி 9 வீராங்கணைகள் டக் அவுட் ஆனதால், நாகலாந்து அணி 17 ஓவர்களில் 2 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேரள அணியின் கேப்டன் மின்னு மணி நான்கு ஓவர்களில் ஒரு ரன்னும் விட்டுக் கொடுக்காமல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்படி ஒரு இலக்கை விரட்டிய கேரள அணி, வழக்கமாக டொக் வைத்து பந்துகளை ஓட்டவில்லை. ஒரே பந்து... அவ்வளவுதான்! இலக்கை அடைந்து வெற்றியை ருசித்தது!
கேரள தொடக்க வீராங்கணை அஞ்சு, தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி வெற்றிவாகை சூடினார்.
சொல்லப் போனால், இது ஒரு சாதனை வெற்றிதான். முன்னர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நேபாள அணிக்கு, மியான்மர் அணியைத் தோற்கடிக்க 2 பந்துகள் தேவைப்பட்டன. ஆம். அந்த அணி இரண்டு பந்துகளை சந்தித்து வெற்றி பெற்றது. ஆனால் கேரள அணியின் வெற்றிக்கோ ஒரே ஒரு பந்து மட்டுமே தேவையாக இருந்தது.
இப்படி சாதனை வெற்றியைப் பதிவு செய்த கேரள அணியின் இந்த வெற்றி, உலக சாதனைதான் என கேரள கிரிக்கெட் சங்கம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வருகிறது.