தசரா பண்டிகைக்காக பலூன் விற்க வந்த ஹக்கிபிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிறுமியின் சடலம் தற்காலிக குடிசைக்கு அருகிலுள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
குல்பர்காவிலிருந்து தசரா பண்டிகையின் போது பலூன் விற்பனைக்காக மைசூருக்கு வந்திருந்த ஹக்கிபிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள், அரண்மனைக்கு முன்புள்ள தொட்டகெரே மைதானம் அருகே தற்காலிகமாக தங்கியிருந்தனர். சாமுண்டி மலை, பன்னி மண்டபம், தேவராஜா சந்தை உள்ளிட்ட பல இடங்களில் இவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி இரவில் காணாமல் போயுள்ளார்.
நேற்று இரவு 12 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு வந்த குடும்பத்தினர், எட்டு பேர் ஒன்றாக உறங்கியுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் மழை பெய்துள்ளது. அப்போது எழுந்தபோது சிறுமி காணாமல் போனது தெரியவந்துள்ளது. உடனடியாக குடும்பத்தினர் மழையிலேயே தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர், நசர்பாத் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து காலை 6.30 மணியளவில், குடிசைக்கு அருகிலுள்ள பள்ளத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தில் சரியாக ஆடை இல்லாததால், குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இதே இடத்தின் மறுபுறத்தில் ஒரு நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். மொத்தத்தில், இரண்டு நாட்கள் இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நசர்பாத் போலீசார் சுமார் 50 குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தசரா கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் உள்ளூர் மக்களிடையே அச்சமும், பீதியும் நிலவுகிறது. விசாரணையில் இதுவரை சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
