Mumbai hotel association request
ஓட்டல்களில் திடீர் தீ விபத்தின்போது, அதனை அணைக்க மணலுக்குப் பதில் மைதா மாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் கோரியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என உணவு விடுதிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஓட்டல்களில் தீ தடுப்பு விதிகளின்படி மணல் சேமித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால், ஓட்டல்களில் உள்ள சமையல் அறைகளில் மணல் வைத்திருப்பது உணவு கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணானது என இந்திய ஓட்டல் சங்கம் கூறி வருகிறது.
இந்த நிலையில், தீயை அணைக்க மணலுக்குப் பதிலாக மைதா மாவை பயன்படுத்த அனுமதி கோரி, மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பழைய முறையை எதிர்க்கவில்லை என்றும், மாற்று ஏற்பாடாக மணலுக்கு பதில் மைதாவை அனுமதிக்குமாறும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
