‘புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை’ - முலாயம் சிங் யாதவ் திட்டவட்டம்
இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமான அறிவித்த முலாயம்சிங் யாதவ், மகன் அகிலேஷுக்கு தனது ஆசி எப்போதும் உண்டு என்றும் கூறினார்.
மூத்த சோசலிஸ்டு தலைவரான முலாயம்சிங் யாதவ், 25 ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார்.
அவருடைய மகன் அகிலேஷ் யாதவ், உ.பி. முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தபோது, கடந்த ஜனவரி 1-ந்தேதி கட்சித் தலைமையையும் கைப்பற்றினார்.
அதன்பின்னர் முலாயம்சிங்கும் அவருடைய தம்பி சிவபால் யாதவும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அகிலேஷ் படுதோல்வியை சந்தித்தார்.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாக, லோக் தளம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த முலாயம்சிங் அந்த கட்சியின் நிறுவனகளில் ஒருவர் ஆவார்.
தற்போது பெயரளவிற்கு செயல்பட்டு வரும் லோக் தளம் கட்சியை முலாயம் மீண்டும் தொடங்கப் போவதாகவும், அது குறித்து அறிவிப்பு திங்கட்கிழமை (நேற்று) வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
அதன்படி நேற்று திரளாக கூடியிருந்த நிருபர்கள் கூட்டத்தில் முலாயம்சிங் பேசினார். அப்போது அவர் ‘‘இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை’’ என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘எனது முடிவை அவர் (அகிலேஷ்) ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என்னுடைய மகன் என்பதால் எனது ஆசி எப்போதும்போல் அவருக்கு உண்டு. ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு எவ்ளவு காலம் நீடிக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது’’ என்றும் குறிப்பிட்டார்.
கட்சித் தொண்டர்களால் ‘நேதாஜி’ என மரியாதையுடன் அழைக்கப்பட்டுவரும் 77 வயதான முலாயம்சிங் யாதவின் வலதுகரமாக விளங்கும் அவருடைய தம்பியான சிவபால் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘முக்கிய பணி காரணமாக அவர் ‘எட்டாவா-மெயின்புரி’யில் (யாதவ் குடும்ப சொந்த ஊர்) இருப்பதாக’’ முலாயம் பதில் அளித்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது-
‘‘கட்சித் தலைவர் பதவியில் மூன்று மாதங்கள் இருந்தபிறகு அதில் இருந்து விலகிவிடுவதாக அகிலேஷ் உறுதி அளித்து இருந்தார். ஆனால், அதன்படி அவர் விலகவில்லை. தங்கள் வார்த்தைகளில் உறுதியாக இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாது. தனது தந்தைக்கு ஆதரவு அளிக்காத ஒருவரை மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
எனது ஆதரவு, மகனுக்கா அல்லது தம்பி சிவபாலுக்கா என்று கேட்கிறார்கள். சமாஜ்வாதி மக்களுக்குத்தான் எனது ஆதரவு. முதுகை ஒடிக்கும் விலையேற்றத்தினால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா கட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றுபட வேண்டிய முக்கியமான தருணம் இது’’.
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.