நடக்காத நடாளுமன்ற கூட்டத்துக்கு சம்பளம் எதுக்கு? - திருப்பி கொடுக்கும் ஒடிசா எம்.பி.யின் நேர்மை
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் எம்.பி.கள் அமளியால் வீணானது, பெரும் கண்டனத்தை உண்டாக்கி வருகிறது.
இந்த சூழலில் பிஜூ ஜனதா தளம் எம்.பி. பைஜாயந்த் ஜெய் பாண்டா என்பவர், நாடாளுமன்றம் முடக்கப்பட்ட நேரத்துக்கு அளவாக எனது ஊதியத்தை திரும்பப் தந்து விடுகிறேன் என டுவிட்டரில் கூறியது அவருக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் குவித்து வருகிறது.
ஓடிசா மாநிலம், கேந்திரபாரா மக்களவைத் தொகுதியில் இருந்து பைஜாயந்த் ஜே பாண்டா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல பைஜாயந்த் ஜே பாண்டா எம்.பி.யை உதாரணமாகக் கொண்டு மற்ற எம்.பி.களும் செயல்படுவார்களா என்று கேட்டபோது, ஒவ்வொரு எம்.பி.யும் ஒரு குறிப்பிட்ட கடப்பாட்டோடு வருகிறோம். ஆதலால் இது சாத்தியமில்லை என பெரும்பாலும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மத்தியப்பிரேதச மாநிலம், நரசிங்பூர் தொகுதி பாரதியஜனதா எம்.பி. பிரஹலாத் சிங் படேல் கூறுகையில், “ ஜெய் பாண்டா வேலை ஏதும் பார்க்கவில்லை என நினைத்து இருக்கலாம் அதனால், ஊதியத்தை திருப்பி கொடுக்கிறாரா?. அவரின் மனநிலைப்படி அது நியாயமாக இருக்கிறது. ஆனால், இது அனைத்து எம்.பி.களுக்கும் பொருந்தாது. பாண்டாவின் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால், சம்பளம் அவருக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு தேவை இருக்கிறது'' என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா கூறுகையில், “ பாண்டாவின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். எத்தனை எம்.பி.கள் இதுபோல் சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள் அவைமுடக்கப்பட்டதற்கு எந்த எம்.பி.யும் தனிப்பட்ட முறையில் காரணம் ஆகமாட்டார்கள் ''எனத் தெரிவித்தார்.
போபால் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா எம்.பி. அலோக் சஞ்ஜார் கூறுகையில், “ என் கட்சி உத்தரவிட்டால், எனது சம்பளத்தை விட்டுக்கொடுக்கிறேன். பாண்டாவின் முடிவு தன்னிச்சையானது. என்னால் முடியாது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். எந்த தனிப்பட்ட எம்.பி.யும் காரணம் இல்லை. என் கட்சி கூறினால், அனைத்து எம்.பி.களும் சம்பளத்தை திருப்பித் தர தயாராக இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.