‘புதிய இந்தியா உருவாகிறது’ - டுவிட்டரில் பிரதமர் மோடி பெருமிதம்
புதிய இந்தியா உருவாகிறது, நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டரில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கோவா, மணிப்பூரில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
125 கோடி இந்தியர்களின் திறமை, வலிமையின் சக்தியால் புதிய இந்தியா உருவாகி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் துணை நிற்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75ம் ஆண்டு 2022ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தி, சர்தார்படேல், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பெருமை கொள்ளும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.