"இது ஆரம்பம்தான்.. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்" - பிரதமர் மோடி உறுதி!
கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என பிரதமர் திரு. நரேந்திரமோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில், பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜாதி பேதங்களைக் கடந்து, நாட்டின் வளர்ச்சியை மக்கள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க தான் பாடுபட்டு வரும்போது தன்னை வெளியேற வேண்டும் என சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதாகத் தெரிவித்த திரு. மோடி, தங்களுடைய கருப்புப் பணத்தையும், குடும்பத்தையும் காப்பாற்ற தீவிர முயற்சியில் இருப்பவர்களால் மாநிலத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பீம்ராவ் அம்பேத்கர் பெயரில், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதை குறைகூறும் அளவுக்கு சிலர் அரசியல் தரம் தாழ்ந்து செயல்படுவதாகவும் தெரிவித்த பிரதமர், கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் தொடரும் எனவும், மக்கள் தான் தங்களுக்கு தலைவர்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.