ரூ.1,316 கோடி சொத்து குவிப்பு…? – அதிகாரிகளின் கண்காணிப்பில் மாயாவதி சகோதரர்…?
குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது தொடர்பாக, பகுஜன் சமாஜ் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார், வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார். தொழிலதிபர்.
தொழிலதிபராக உள்ள இவரது பெயர், இந்திய தொழிலதிபர்கள் பட்டியலில் பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவர், குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மாயாவதி முதல்வராக இருந்தபோதும், 2007 முதல் 2014 காலகட்டத்தில், ரூ.7.5 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆனந்த்குமார் குறித்தும், இவர் தொடர்பான சில நிறுவனங்கள் வாங்கிய பல கோடி கடன் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனந்த் குமார், மிகப்பெரிய பங்குதாரராக உள்ள, டெல்லியை சேர்ந்த ஆக்ரிதி ஓட்டல் நிறுவனங்கள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 இயக்குனர்களை கொண்ட இந்த ஓட்டல் நிர்வாகத்தில், 37 பேர் பங்குதாரர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் சட்டவிரோதமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பங்குதாரர்களாக உள்ளவர்களின் நிறுவனங்கள் வெறும் காகித அளவில் உள்ளதாகவும், சில நிறுவனங்கள், இந்த ஓட்டல் நிர்வாகத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த 3 நிறுவனங்களும் கொல்கத்தாவில் உள்ள ஒரே கட்டிடத்தில் செயல்படுவதும், இதற்கு ஒரே இயக்குனர்கள் உள்ளதும் அதிகாரிகளுக்கு ரசிகய தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, ஆனந்த்குமார், அதிகாரிகளின் ரசிகய கண்காணிப்பில் சிக்கியுள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.