அரவிந்த் சுப்பிரமணியத்தை முட்டாள் என்கிறாரா, மோடி? - ப.சிதம்பரம் ‘கிடுக்கிப்பிடி’ கேள்வி
சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) அதிகபட்சமாக 18 சதவீதம் வரை மட்டுமே வைத்து இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறிய அனைவரும் முட்டாள்களா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பு உள்ளார்.
18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.வரி தற்போது அதிகபட்சமாக 28 சதவீதம் வரை இருக்கிறது. இதை 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பிரசாரம்
இது குறித்து குஜராத்தின் முர்பி நகரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ ஜி.எஸ்.டி. வரியை ஒரேமாதிரியாக 18 சதவீதம் விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருகிறது. இது மிகப்பெரிய முட்டாள் தனமான சிந்தனை. உப்புக்கும் 18சதவீத வரி ரூ.5 கோடி மதிப்புள்ள சொகுசு காருக்கும் 18 சதவீதம் வரியா? .
மதுவுக்கும், புகையிலைக்கும் 28 சதவீதம் விதிக்கப்பட்டு இருக்கும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக குறைக்க கோருகிறார்கள். அனைவருக்கும் குறைந்த விலையில் மதுவையும், சிகரெட்டையும் விற்க கூறுகிறார்களா?. காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர மக்களுக்கும் எதிரானவர்கள்’’ என்று பேசி இருந்தார்.
அரவிந்த் முட்டாளா?
இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் கூறியிருப்பதாவது-
ஜி.எஸ்.டி. வரிக்கு அதிகபட்சமாக 18சதவீதம் வரி விதிக்க காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் வலியறுத்தினார்கள். ஏன் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அரவிந்த் சுப்பிரமணியம் கூட இதை கருத்தை வலியுறுத்தினார். அப்படியென்றால், 18 சதவீதம் வரி இருக்க வேண்டும் என்று கூறிய அரவிந்த் சுப்பிரமணியத்தை முட்டாள் என்று மோடி கூறுகிறாரா?. என்ன சொல்கிறார் மோடி?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.