மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒருவர் மேடை முன் குழந்தையைத் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற குஷ்வாஹா சமாஜின் மாநாட்டின் போது ஒரு நபர் தடுப்புகளைத் தாண்டி வந்து தனது ஒரு வயது குழந்தையை முதல்வர் முன் விசினார். பேசிக்கொண்டிருந்த முதல்வர் சவுகான் உடனடியாக குழந்தையை நோக்கி ஓடிவந்தார்.
அங்கிருந்த காவலர் ஒருவர் குழந்தையை தூக்கி தாயிடம் ஒப்படைத்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை பெரிய காயம் ஏதுமின்றி பிழைத்தது. குழந்தையை முதல்வர் முன் கொண்டுவந்த நபர் ஷாஜாபூர் மாவட்டத்தில் வசிக்கும் முகேஷ் படேல் என்று விசாரணையில் தெரியவந்தது. அவரது குழந்தை நரேஷுக்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சைக்கு அளிக்க முதல்வரிடம் உதவி கோரி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்த சவுகான், குழந்தையின் உடல்நிலை குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்து, குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யாவுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, படேல் தனது குழந்தை நரேஷை ஏறக்குறைய 20 அடி தூரத்தில் இருந்து மேடை முன்பு வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
முகேஷ் படேல் தனது வயதான தாய், மனைவி, ஐந்து வயது மூத்த மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஒரு வயது குழந்தை நரேஷ் உடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் பல்வேறு மருத்துவமனைகளில் நரேஷுக்கு ஆரம்ப சிகிச்சைச் செய்திருக்கிறார். ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் சிறப்பு சிகிச்சை பெற வசதி இல்லை. அங்கு மருத்துவர்கள் குழந்தையை மும்பைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முதற்கட்டமாக ரூ.3.50 லட்சம் தேவைப்படுவதாக முகேஷ் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, சாகரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடப்பதை அறிந்து படேலும் அவரது மனைவியும் தங்கள் மகனின் சிகிச்சைக்கு ஆதரவைப் கோரி முறையிட வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் முதல்வரை சந்திக்க முடியாமல் காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மணிநேரமாகப் போராடிய பின்பு, மகேஷ் படேல் தனது மகனை மேடை முன்பு வீசிவிட்டார் என போலீசார் அளிக்கும் தகவலில் தெரியவருகிறது. ஆனால், பின்னர் அவர் தன செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
