mamtha banerji press meet about the riot in west bengal
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பஷிர்காத் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது.
இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறி, அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மோசமாக உள்ளதால் அரசை கலைக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலைப்பகுதியில் கலவரம் நீடிக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இரண்டு டிவி சேனல்கள் கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டன. பாதுரியா மற்றும் பஷீர்ஹட் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மம்தா வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்படவில்லை. மாநில எல்லை பகுதியில் உள்ள பகுதிகளில், பிரச்னை ஏற்படும் வகையில், பாஜகவுக்கு மிகவும் வேண்டப்பட்ட வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டன என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
