கொரோனா 2வது அலை ஆரம்பம்... அதிகரிக்கும் உயிரிழப்பு... மத்திய அரசு எச்சரிக்கை...!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்த குழுவினர், அம்மாநிலத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் படிப்படியாக கட்டுப்பட்டிற்கு வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அரசுகளின் கடும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று வெகுவாகவே கட்டுக்கொள் கொண்டு வரப்பட்டது. அதேசமயத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்ஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கொரோனாவை முற்றிலும் விரட்ட முடியும் என்ற நம்பிக்கை எழுந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு குழுவினர் விடுத்துள்ள எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்த குழுவினர், அம்மாநிலத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை செயலர் மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் சீத்தாராம் குந்தேக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் 2வது அலை தொடக்கத்தில் உள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு, பரிசோதனை, தனிமைப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆகிய பணிகள் குறைவாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கையை கணிக்கும் போது இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
எனவே பரவலை தடுக்க கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவதும், வீடு வீடாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது முக்கியம். இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பகுதியளவு ஊரடங்கு போன்றவை மூலம் கொரோனா பரவல் ஓரளவுத்தான் குறையும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகளை உருவாக்குதல் மற்றும் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.