‘மதிய உணவு’ ‘அங்கன்வாடி’, ஊழியர்களுக்கும் இனி பி.எப்., இ.எஸ்.ஐ. வசதி - ‘கிராஜூவிட்டி’ ரூ.20 லட்சமாக உயர்கிறது
நாட்டில் உள்ள மதிய உணவு திட்டம், அங்கன்வாடிகள், ஆஷா எனப்படும் சுகாதாரத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் பி.எப்., இ.எஸ்.இ. வசதி வழங்கப்பட உள்ளது என மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாதெரிவித்தார்.
மாநாடு
மகளிர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் முக்கிய பெண் தலைவர்களுடன் மாநாடு நேற்று நடந்தது. அதில் மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா கலந்து கொண்டார். அந்த கூட்டம் முடிந்த பின் அவர் நிருபர்களிடம் பேசியதாவது-
பி.எப். இ.எஸ்.ஐ.
மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அங்கன்வாடி, சுகாதாரத்துறை எனப்படும் ‘ஆஷா’ அமைப்பில் அங்கீகாரத்துடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ. போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த அமைப்புகளில் பணியாற்றும் 90 சதவீதம் பெண்கள் ஆவார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இ.எஸ்.ஐ., பி.எப். அமைப்புகளில் நடத்திய ஆலோசனைக்கு பின், இந்த அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் சமூகபாதுகாப்பு வசதிகள் கிடைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைக்கும்
இவர்கள் தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றவில்லை, அரசுக்காகவே பணியாற்றுகிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள்ேமம்பாட்டு துறை, மனித வளத்துறை, தொழிலாளர் துறை, சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்தகுழுவை அமைத்து இருக்கிறேன். எங்களின் முடிவுக்கு நிச்சயம் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.
33 சதவீத இடஒதுக்கீடு
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மகளிர் முன்னேற்றத்துக்காக பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சட்டசபை, நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கடப்பாடு கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறோம். போலீஸ் துறையில் 33 சதவீதம் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க 7 மாநிலங்கள் முன்வந்துள்ளன.
மேலும், பெண்கள் குழந்தை பேறுக்கு பின்பும், குழந்தை பேறுக்கு முன்பாக பார்த்த அதே வேலையை தரவும் உறுதி செய்துள்ளோம்.
ரூ.20 லட்சம்
நிறுவனங்கள் பணியாற்றுபவர்கள் ஓய்வுபெறும்போது பெறும் ‘கிராஜூவிட்டி’ பணத்தை வரி இல்லாமல் ரூ.20 லட்சம் வரை பெற்றுக்கொள்வது குறித்து தொழிலாளர்கள் அமைப்புடன் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த மாதம்கூட பேச்சு நடத்தி இருக்கிறோம்.
இப்போது ‘கிராஜூவிட்டி’ ரூ.10 லட்சம் வரை மட்டுமே பெறுகிறார்கள். இதை ரூ.20 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம். இது குறித்து ஆலோசனை நடத்த தொழிலாளர்கள் அமைப்புகள், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.