தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த மொத்தம் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித் பவாருக்கும் இடையே கட்சியை கைப்பற்றுவதில் அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தலையீட்டால், அந்த பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் ப்ரஃபுல் படேல் ஆகியோரை சரத் பவார் நியமித்தார். இதனால், அஜித் பவார் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிர அரசியலில் யாரும் எதிர்பாரா விதமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்தார். அடுத்த சில மணி நேரங்களில் அம்மாநில துணை முதல்வராகவும் அவர் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கும் நிலையில், இரண்டாவது துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அஜித் பவார் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரையும் சேர்த்து மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்றார் அஜித் பவார் - சரத் பவாருக்கே தெரியாமல் நடந்த விஷயம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம், செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்ற என்சிபி எம்.எல்.ஏ.க்கள் பட்டியல்:


அஜித் பவார் - துணை முதல்வர்
சாகன் புஜ்பால்
ஹசன் முஷ்ரிப்
தனஞ்சய் முண்டே
திலீப் வால்ஸ் பாட்டீல்
தர்மராவ் பாபா அத்ரம்
அதிதி தட்கரே
அனில் பாட்டீல்
சஞ்சய் பன்சோட் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.