ஒரே மின்னல் … அரச மரத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலி !!
பீகார் மாநில கிராமம் ஒன்றில் மரம் ஒன்றின் கீழ் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 10 நாட்களாக வட மாநிலங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கியமாக மகாராஷ்ட்ரா, பீகார், அஸ்ஸாம் உதிதரபிரதேச மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்
இதனிடையே பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தீடிரென மின்னல் தாக்கியது. இதில் 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.