திருப்பதி நடைபாதையில் ஆறு வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது; அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சி
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை இன்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
திருப்பதி நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் பெரிய சிறுத்தை சிக்கியது.
கடந்த ஜூன் 24 ம் தேதி கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த கெளசிக் என்ற 4 வயது சிறுவன் பெற்றோருடன் திருப்பதி நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கி வனப்பகுதிக்கு கவ்வி சென்றது. பக்தர்கள் மற்றும் காவல் துறையினர் துரத்தியதால் சிறுவன் கெளசிக்கை வனப்பகுதியில் விட்டு சென்றது. அதன் பின்னர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
கௌசிக்கை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் அதனை பாக்கராபேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இருப்பினும் இதன் தாய் சிறுத்தை அதே பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த லட்ஷிதா என்ற 6 வயது சிறுமி பெற்றோருடன் திருப்பதி மலைப்பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை பாத யாத்திரையாக நடந்து சென்றபோது லட்ஷிதாவை கண் இமைக்கும் நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தாக்கி கவ்வி சென்றது.
இதனை யாரும் கவனிக்காததால் பல இடங்களில் தேடி வந்தனர். சனிக்கிழமை காலை வனப்பகுதியில் லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில் இறந்து கிடந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு மலைப்பாதை சாலைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இருச்சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க நடைப்பாதையில் காலி கோபுரம் முதல் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி வரை 30 இடங்களில் நைட் விஷன் டிராப் கேமிரா பொருத்தப்பட்டு 4 நான்கு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
நேற்று இரவும் நடைப்பாதையில் 2450 படி அருகே சிறுத்தை வந்தது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறையினர் எச்சரிக்கையுடன் இருந்தனர். இந்நிலையில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை இன்று காலை சிக்கியது. சிறுமி லட்ஷிதாவை தாக்கிய அதே இடத்தின் அருகே வைக்கப்பட்டுருந்த கூண்டுல் சிறுத்தை சிக்கியது.
கோவையில் திடீரென வாரச்சந்தைக்குள் புகுந்த கார்; 3 பேர் படுகாயம்
பிடிப்பட்ட சிறுத்தை பெரியதாக உள்ளதால் ஏற்கனவே பிடிக்கப்பட்ட குட்டி சிறுத்தையின் தாய் சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமியை தாக்கிய சிறுத்தை பிடிபட்டதால் பக்தர்கள், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.