Lakhimpur violence case:செய்தியாளர்களை மோசமாக திட்டி தாக்க முற்பட்ட அமைச்சர்.. வீடியோ வைரல்
லக்கீம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வியெழுப்பிய செய்தியாளர்களை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா திட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு மோதிய லக்கீம்யூ வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சரின் மகனைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் பத்திரிகையாளர் ஒருவர் லக்கிம்பூர் சம்பவ விசாரணைக் குழு அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர், "இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா? திருடர்களே" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். மேலும் அந்த செய்தியாளரின் மைக்கையும் பறிக்க முயற்சி செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
லக்கிம்பூர் கேரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை துவக்கிவைத்த நிகழ்ச்சியின் போது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது. முன்னதாக இன்று காலை லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். லக்கிம்பூர் கேரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.கொலை செய்யும் நோக்கத்துடன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டிச் சென்ற வாகனத்தால் விவசாயிகள் நசுக்கப்பட்டதாகவும், அது அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அதை விரும்பவில்லை. அரசாங்கம் எப்படி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டதோ, அதேபோல் அமைச்சரையும் நீக்கும் என்று கூறினார். இந்நிலையில் லக்கீம்பூர் வன்முறை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மகன் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமைச்சர் தாக்க முற்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆசிஷ் மிஸ்ராவை அமைச்சர் நேற்று பார்த்துவிட்டுவந்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கிய அஜய் மிஸ்ரா அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த வீடியோவில், மைக்கை நிறுத்து, இந்தமாதிரி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள் என்று கேள்வியெழுப்பியதுடன், செய்தியாளர்களை திருடர்கள் என்று அழைப்பதும் பதிவாகியுள்ளது.