"புதுச்சேரி மக்கள் குடியின் பிடியில் சிக்கியுள்ளார்கள்" - கிரண்பேடி ஆதங்கம்!!
புதுச்சேரி மக்கள் குடியின் பிடியில் சிக்கியுள்ளார்கள் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமைக்காக நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டுக்கு கிரண் பேடி தலைமைத் தாங்கினார்.
அந்த கூட்டத்தில் பேசிய கிரண் பேடி, "புதுச்சேரியில் மக்கள் குடியின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அதனால் கிராமப் பகுதிகளில் பலகீனமாக குழந்தைகளை பார்க்க முடிகின்றது. லஞ்சம், ஊழல் மற்றும் மாநிலத்தை அச்சுறுத்தும் ரவுடிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் குரல் கொடுத்து தேசத்தின் கட்டமைப்புக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
மேலும் 'புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள ரவுடிகளின் மனநிலையை மாற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு திட்டத்தை இன்று துவக்கி வைக்க இருக்கிறேன்' என்று கூறினார்.