அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்காக தனி வார்டு! கேரள அரசு அதிரடி...
கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்காக தனியாக கிளினிக் தொடங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா நிருபர்களிடம் திருவனந்தபுரத்தில் இன்று கூறுகையில், “ திருநங்கைகளுக்காக பிரத்யேகமாக அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் கிளினிக் விரைவில் தொடங்கப்படும். சோதனைமுயற்சியாக,கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இதுபோல் தொடங்கப்படும். அனைத்து அரசு துறைகளும் இந்த மருத்துவமனைக்குக்கு நன்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் முதல் செவ்வாய்கிழமை இந்த மருத்துவமனை இயங்கும்.
5 சிறப்பு பிரிவு மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளிப்பார்கள். பொது மருத்துவம், மனோதத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் மருத்துவம், ஹார்மோன் மருத்துவம் உள்ளிட்ட 5 பிரிவுகள் சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். முதல்கட்டமாக செவ்வாய்கிழமை மட்டும் இயங்கும். அதன்பின், படிப்படியாக நாள்தோறும் செயல்படும் வகையில் மாற்றப்படும்.
மேலும், திருநங்கைகளுக்கு பாலியல் ரீதியாக அறுவை சிகிச்சை செய்வதற்காக இரு அறுவை சிகிச்சை பிரிவுகள் தனியாகஅமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் இந்த அறுவை சிகிச்சை பிரிவு கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்படும்.
திருநங்கைகளுக்கு இங்கு மருத்துவசிக்சை அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும். அதற்கு அவர்கள் அரசின் சுகாதார அட்டைகளைபெற வேண்டும்.
மேலும், சட்டரீதியான உதவிகளைப் பெறவும் இந்த மருத்துவமனைகளை திருநங்கைகளுக்கு உதவும். இதற்காக திருநங்கைகள் 3 பேர், தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநங்கைகளுக்கு உரிய நேரத்தில் தகுந்த மருத்துவம் கிடைப்பதில்லை என புகார்கள் வந்துள்ளன. அவர்களுக்கு இந்த மருத்துவமனைகளும், சிகிச்சைமுறையும் நிச்சயம் பலன் அளிக்கும். சில பிரத்யேகமான உடல்நலக் குறைபாடுகளை சந்திக்கும் திருங்கைகள், அதற்கான மருத்துவசிகிச்சை எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்கு இது உதவி புரியும்” என்றார்.