உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் இன்று ஜாமீன் மனு - கேரள அரசு கடும் எதிர்ப்பு
நடிகை பாவனா, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப், தனக்கு ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த சில மாதத்துக்கு முன், நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரை வழிமறித்த மர்மநபர்களால், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில், மலையாள திரைப்பட நடிகர் திலீப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து கடந்த 10ம்தேதி அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட், வரும் 25-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் இப்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து திலீப் இன்று, கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவரு வழக்கறிஞர் கே.ராம்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“நடிகை பாவனா கடத்தி, பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் திலீப் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளது” என்றார்.