கார்த்திகை - தை சீசனுக்காக 8 கி.மீ. நடந்து சென்று சபரிமலையை பார்வையிட்ட கேரள முதல்வர்!
சபரிமலையில் கார்த்திகை - தை சீசன் தொடங்க இருப்பதையொட்டி கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று சபரிமலையை பார்வையிட்டார்.
நவம்பர் 16 முதல்
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் சபரி மலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையொட்டி கேரள போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலையில் கார்த்திகை - தை சீசன் தொடங்கவுள்ளது.
அடிக்கல் நாட்டு விழா
இதையொட்டி, கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் நள்ளிரவில் சபரி மலைக்கு சென்றார். அங்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். அவருடன் அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். சபரிமலைக்கு பினராயி விஜயன் செல்வது என்பது இதுவே முதல் முறையாகும். அங்கு புதிய விருந்தினர் மாளிகை மற்றும் தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
ஒன்றரை மணி நேரம்
90 நிமிட நடை பயணத்துக்கு பிறகு பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- சபரிமலையை அடைவதற்கு எனக்கு ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. எனது பயணத்தை தொடங்கும் முன்னர் சிறிது பதற்றம் அடைந்தேன். சிறிது தூரம் நடக்கத் தொடங்கிய பின்னர் எனக்கு சிரமம் ஏதும் தெரியவில்லை. இது எனக்கு நல்ல அனுபவமாக உள்ளது என்றார்.
கடந்த ஆண்டு வக்பு வாரிய அமைச்சராக இருந்த கே.டி. ஜலீல் சபரிமலைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சபரிமலைக்கு சென்றது அதுவே முதல் முறையாகும்.