மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு?... ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் அதிரடி உத்தரவு...!
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 14ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் ஜூன் 14ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மே மாத தொடக்கத்தோடு ஒப்பிடும் போது கர்நாடகாவில் கொரோனா தொற்று 65 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேபோல் நகரப்பகுதிகளை விட ஊரக பகுதிகளில் தற்போது தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இந்த சமயத்தில் ஊரடங்கை தளர்த்துவது மீண்டும் தொற்று அதிகரிக்க காரணமாகும் என மருத்துவர் நிபுணர்கள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு பரிந்துரைத்துள்ளனர்.
எனவே கர்நாடகாவில் தற்போது ஜூன் 7 வரை உள்ள ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தாக்கத்தின் வேகம் குறையும் நிலையில் ஊரடங்கை ஜூன் 21 வரை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா முழு ஊரடங்கில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.