ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இதுக்குறித்த நீதிமன்ற விவாதங்களை ஊடகங்கள் வெளியீட வேண்டாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மற்றொரு பிரிவு மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.இதனால் மாணவ- மாணவிகள் சீருடைகள் அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் முழுவதும் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்கு வெளியே இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து சொல்ல தொடங்கியுள்ளனர்.
கர்நாடக கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, நேற்று விசாரித்த தனி நீதிபதி கிருஷண தீட்சித், விரிவான அமர்வுக்கு மாற்ற பரிந்துரைந்தார். இதனையடுத்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணன் தீட்சித், ஜே.எம்.காசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்றும் ஏன் தலையிட வேண்டும் என கூறி எந்தவொரு குறிப்பிட்ட தேதியும் ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இதுக்குறித்த நீதிமன்ற விவாதங்களை ஊடகங்கள் வெளியீட வேண்டாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளில் வருகிறதா, மத வழக்க நடைமுறையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக என்பதை நாங்கள் பரிசிலித்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
